சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு; கார்த்தி சிதம்பரத்தை மே 30ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை; டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது. சீனருக்கு விசா பெற்றுத்தர லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. விதிகளை மீறி 263 சீனர்களுக்கு  விசா வாங்கித் தந்ததாகவும் அதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ டெல்லி பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய சிபிஐ, அவருடைய ஆடிட்டர் பாஸ்கர் ராமனை கைது செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் டெல்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 4 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர். பிற்பகல் 2 மணியளவில் மதிய உணவுக்காக சென்றார் கார்த்தி சிதம்பரம். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ஜோடிக்கப்பட்டவை, பொய்யானவை” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தை வரும் மே 30 ஆம் தேதி வரை அமலாக்கத் துறை கைது செய்ய டெல்லி கீழமை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதே புகாரில் அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அவரை கைது செய்ய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Related Stories: