டெல்லி: பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் துத்தநாக நிறுவனத்தின் 29.5 சதவிகித பங்குகளை வேதாந்தா நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான கமிட்டி கூட்டம் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது.
இதில் இந்துஸ்தான் துத்தநாக நிறுவனத்தின் 29.5 சதவிகித பங்குகளை வேதாந்தா நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 29.5 சதவிகித பங்குகள் என்பது 124 கோடியே 96 லட்சம் பங்குகள் ஆகும். இவற்றின் விற்பனை மூலம் ஒன்றிய அரசுக்கு தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.38,000 கோடி வருவாய் கிடைக்கும்.
இந்துஸ்தான் துத்தநாக நிறுவனத்தில் முதன் முதலாக 2002-ம் ஆண்டில் அப்போதைய வாஜ்பாய் அரசு 26 சதவிகித பங்குகளை வேதாந்தா குழுமத்திற்கு விற்றது. அடுத்த ஆண்டிலேயே மேலும் 18.92 சதவிகித பங்குகளை வேதாந்தா நிறுவனத்திற்கு வாஜ்பாய் அரசு விற்பனை செய்தது. அவைபோக சந்தையில் இருந்தும் 20 சதவிகித பங்குகளை வாங்கியுள்ள வேதாந்தா நிறுவனம், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முடிவால் இந்துஸ்தான் துத்தநாக நிறுவனத்தின் சுமார் 94.5 சதவிகித பங்குகளை சொந்தமாக்கி கொள்கிறது.