கோபி அருகே மனைவி, குழந்தைகள் பிரிந்த ஏக்கம்; உடலில் பற்றி எரிந்த தீயோடு நடுரோட்டில் அலறித்துடித்த டிரைவர்: சமூக வலைதளத்தில் வைரல்

கோபி: கோபி அருகே மனைவி, குழந்தைகள் பிரிந்த ஏக்கத்தில் டிரைவர் தீக்குளித்து நடுரோட்டில் அலறித்துடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது எஸ்.கணபதிபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (36). ரிக் வண்டி டிரைவர். இவரது மனைவி இந்திராணி (30). இவர்களுக்கு ஜெய என்ற மகளும், மிதுன் சக்ரவர்த்தி என்ற மகனும் உள்ளனர்.

செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் சம்பாதிக்கும் பணத்தை குடித்தே செலவு செய்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அடிக்கடி ஏற்பட்ட சண்டையால் விரக்தியடைந்த இந்திராணி சில மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கைவிடமுடியாத குழப்பழக்கம் ஒருபுறம், மனைவி, அழகான குழந்தைகளை பார்க்க முடியாதது மறுபுறம் என்று செந்தில்குமார் ஏக்கத்தில் தவித்தார். நேற்று காலை அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு செந்தில்குமார் சென்றார். அங்கு சாமி கும்பிட்டார். அதன்பின்னர் தான் கொண்டு வந்திருந்த மண் எண்ணைய்யை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். கோயிலில் உடலில் பற்றி எரிந்த தீயோடு வெளியே ஓடி வந்தார். தீயின் கொடுமை தாங்கமுடியாமல் அங்கிருந்த கோபி-அந்தியூர் சாலையில் படுத்து உருண்டு அலறி சத்தம்போட்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அருகில் கிடந்த சாக்குபையை போட்டு செந்தில்குமார் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைகாக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு ஆபத்தான நிலையில் செந்தில்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் உடலில் பற்றி எரிந்த தீயோடு நடுரோட்டில் ஓடி வந்ததை அந்த வழியே காரில் வந்தவர் வீடியோ எடுத்தார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைலராகி வருகிறது.

Related Stories: