ஆரல்வாய்மொழி அருகே பரபரப்பு: குருசடியில் உண்டியல் பணம் கொள்ளை

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி  அருகே சீதப்பால் பகுதியில் புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் கட்டுப்பாட்டில் செண்பகராமன்புதூர்- பூதப்பாண்டி நெடுஞ்சாலையில் சீதப்பால் ஆற்றங்கரை காலனி அருகே அதிசய மிக்கேல் அதிதூதர் குருசடி உள்ளது. இந்த குருசடியை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில் நேற்று காலை குருசடிக்கு வந்த பொதுமக்கள் உள்கதவு  பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர்  உள்ளே பார்த்தபோது உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது தெரியவந்தது. மேலும் சிசிடிவி காட்சிகள் பதிவாகும் பேக் அப் கருவியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து ஆரோக்கிய நாதர் ஆலய பங்கு தந்தை  ரஞ்சித் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் குருசடிக்கு விரைந்து  வந்தார். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய  ஆய்வாளர் மீனா, உதவி ஆய்வாளர் லாரன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில்  விசாரணை நடத்தினர். விசாரணையில் உண்டியலில் இருந்து ரூ.25  ஆயிரத்துக்கும்  அதிகமான  பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

இதையடுத்து குருசடிக்கு அருகே உள்ள நிறுவனங்களில்  பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம்  பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: