மணிமுத்தாறு பகுதியில் கரடிகள் மீண்டும் அட்டகாசம்: இரவில் வனத்துறையினர் ரோந்து

அம்பை: மணிமுத்தாறு பகுதியில் இரவில் மீண்டும் கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் தீப்பந்தங்களுடன் அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில் என்பதால் பலர் ஆடு, மாடு வளர்ப்பதோடு விவசாயமும் செய்து வருகின்றனர். இப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளதால் விளைநிலங்கள், கிராமங்களுக்குள் யானை, கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.  

இந்நிலையில் மணிமுத்தாறு சிறப்பு காவல்படை குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக கரடி, சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு  தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு குட்டிகளுடன் கரடி உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. தகவலறிந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கரடியை காட்டுக்குள் விரட்டினர். மேலும் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை, ஹரிபாபு என்பவர் வீட்டில் வளர்த்த நாயை தூக்கி சென்று கடித்து கொன்றது.

குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவதை தடுத்திட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகபிரியா உத்தரவின் பேரில் வனச்சரகர்கள் சுரேஷ், பாலமுருகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் 10 பேருடன் நேற்று இரவில் மணிமுத்தாறு குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குக்களை விரட்டிட தீப்பந்தத்துடன் ரோந்து சென்றனர்.

அப்போது மணிமுத்தாறு காவலர்கள் பயிற்சி அணி கமாண்டர் வீட்டின் பின்புறம் ஒரு கரடி, 2குட்டிகளுடன் சுற்றி திரிவதை கண்டனர். உடனடியாக வெடிபோட்டு, தீப்பந்தம் ஏந்தி காட்டுக்குள் விரட்டினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் யாரும் இரவில் வெளியே வரக்கூடாது, அப்படி வந்தால் கையில் தீப்பந்தம் வைத்திருக்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: