சென்னை: பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்திலிருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் அவ்வப்போது குப்பை எரிவது வழக்கம். இந்நிலையில், குப்பைக்கிடங்கு அருகில் தலை மற்றும் கைகள் இல்லாமல் ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய 3 காவல்நிலையங்களில் இருந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சம்பவம் நடந்த இடம் எந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் வரும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆவடி காவல்நிலைய எல்லைக்குள் வரவில்லை என்பதால் ஆவடி போலீசார் சென்றுவிட்டனர். பூந்தமல்லி, திருவேற்காடு இரு காவல்நிலைய போலீசாரிடையே மீண்டும் எல்லை பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசாரிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.