×

ராமேஸ்வரம் அருகே கொடூர சம்பவம் பெண்ணை பலாத்காரம் செய்து எரித்துக்கொலை

* ஒடிசா இளைஞர்கள் 6 பேர் உள்பட 7 பேர் கைது
* மறியலால் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொன்ற  ஒடிசா மாநில இளைஞர்கள் 6 பேர் உள்பட 7 ேபரை போலீசார் கைது செய்தனர். கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ராமேஸ்வரம் - பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ராமேஸ்வரம் அருகே வடகாடு கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின், 45 வயதான மனைவி, தினமும் வடகாடு நரிக்குழி கடல் பகுதியில் கடல்பாசி சேகரிக்க செல்வது வழக்கம். காலை 8 மணிக்கு கடல்பாசி சேகரிக்க செல்லும் இவர், பிற்பகல் 2 மணிக்கு வீட்டிற்கு வந்து விடுவார். நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சாப்பாடு பாத்திரத்துடன் கடல்பாசி சேகரிக்க நரிக்குழி கடற்கரை பகுதிக்கு சென்றார். ஆனால்  வீடு திரும்பவில்லை.

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இவரது கணவர், மாலை 4 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். மனைவி வீட்டில் இல்லாததால், வடகாடு கடற்கரை பகுதிக்கு சென்று தேடியுள்ளார். அங்கு அவரை காணவில்லை. இதுபற்றி உறவினர்கள், கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் பதற்றமடைந்து வடகாடு, நரிக்குழி கடற்கரை பகுதி முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் ராமேஸ்வரம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனிடையே வடகாடு நரிக்குழி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் இறால் பண்ணையில் வேலை செய்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மீது சந்தேகம் உள்ளதாக, கடல்பாசி சேகரிக்க செல்லும் பெண்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரவு 8 மணியளவில் அந்த இறால் பண்ணை உள்ள பகுதிக்கு அருகிலுள்ள முள் காட்டிற்குள் சென்று போலீசார், பொதுமக்கள் தேடி பார்த்தனர்.

அங்கு காணாமல் போன பெண் அணிந்திருந்த செருப்பில் ஒன்று மட்டும் கிடைத்தது. மேலும் முட்புதர்கள் நிறைந்த அப்பகுதிக்குள் சென்று தேடிய போது, அந்த பெண்ணின் உடல் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில், நிர்வாண நிலையில் கிடந்தது. அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து, தீவைத்து எரித்திருப்பது தெரியவந்தது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த இறால் பண்ணைக்குள் நுழைந்து பொருட்களை அடித்து, உடைத்து சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த ஒடிசா ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீசார் அங்கிருந்த ஒடிசா இளைஞர்கள் 6 பேர் உள்பட 7 ஊழியர்களை மீட்டு தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். இதில், நேற்று முன்தினம் காலை பண்ணையில் இருந்து வெளியே வந்த இவர்கள் 7 பேரும், பகல் 1 மணிக்கு மேல்தான் பணிக்கு திரும்பியதும், ஒடிசாவுக்கு ரயிலில் செல்வதற்காக அவசர அவசரமாக மாலையில் 6 பேர் டிக்கெட் முன்பதிவு செய்ததும் தெரிந்தது.

 ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் தலைமையில் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். அசம்பாவிதங்களை தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். பெண்ணின் உடலை மீட்ட போலீசார் அதிகாலை 3 மணியளவில் உடற்கூறு பரிசோதனைக்காக ராமநாதபுரம் ஜிஹெச்சிற்கு கொண்டு சென்றனர். பொதுமக்களின் தாக்குதலில் காயமடைந்த 7 பேரையும் சிகிச்சைக்காக மதுரை ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் ஒடிசா இளைஞர்கள் 6 பேர் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று காலை 8 மணியளவில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை கோரியும், நஷ்டஈடு கோரியும் ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் - பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். பிற்பகல் 2 மணிக்கு மேலும் மறியல் நீடித்தது. அப்போது சிலர் டயரை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சமாதான கூட்டத்துக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த மறியலால் மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சுமார் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொடர்ந்து பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறால் பண்ணைக்கு சீல்
ஒடிசா இளைஞர்கள் வேலை பார்த்த இறால் பண்ணை அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து  அப்பண்ணையை சீல் வைத்து மூட மீன்வளத்துறை நேற்று மாலை உத்தரவிட்டது.



Tags : Rameswaram , Atrocities near Rameswaram Woman raped and burned to death
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...