செய்யாறு: செய்யாறு அருகே கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்து, திருமணம் செய்து கொள்ளும்படி மாணவிக்கு மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். தனியார் கல்லூரியில் அறிவியல் பாடப்பிரிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றிருந்தார்.
அப்போது, மாணவியின் அண்ணன் முறை உறவினரும், செய்யாறு அரசு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருபவருமான காஞ்சிபுரம் தாலுகா, அய்யங்கார்குளம் பகுதியை சேர்ந்த தமிழரசன்(20) என்பவர், இவரது வகுப்பறைக்குள் திடீரென நுழைந்தார். பின்னர், மாணவியை அசிங்கமாக பேசி, கையை பிடித்து வெளியே இழுத்து வந்து, `நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ள நினைத்தால் கொலை செய்து விடுவேன்’ என மிரட்டல் விடுத்தாராம்.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தனியார் கல்லூரி நிர்வாகத்தினர், தமிழரசனை பிடித்து செய்யாறு போலீசில் ஒப்படைத்தனர். தமிழரசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.