கிண்டி கிங்ஸ் முதியோர் மருத்துவமனை கட்டிட உறுதித்தன்மை குறித்து ஐஐடி பேராசிரியர் தலைமையில் 3 பேர் குழு ஆய்வு : அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னையில் இன்று அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு பருவ மழையின் போது ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதியில் ஆய்வு செய்தோம்.  அம்பாள் நகர் பகுதியில் தேங்கும் தண்ணீரை அகற்றும் வகையில் 400 மீட்ட நீளத்தில் ரூ.3 கோடி  மதிப்பீட்டில் வடிகால் கட்டப்பட்டு மழைநீர் சூழாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்டோம்.  சென்னை கிண்டி மடுவின்கரை, ஆலந்துர் பகுதி மழைநீர் வடிகால் பணிகளை திட்ட மதிப்பீடு தயார் செய்து பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறிய அவர், அடுத்த மழையில் சென்னையில் மழைநீர் தேங்க கூடாது என்ற ஆலோசனையை முதலமைச்சர் வழங்கியுள்ளார். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் மத்திய அரசின் நிதியுடன் கட்டப்பட்ட முதியோர் மருத்துவமனை கொரோனா காலத்தில் கொரோனா மருத்துவமனையாக பயன்பட்டு வந்தது. தமிழகத்தில் முதலமைச்சர் ஆலோசனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கொரோனா இல்லாத நிலை உருவாகி உள்ளது.  இதனால் மருத்துவமனை முதியோர் மருத்துவமனையாக மாற்றப்படும். இந்த மருத்துவமனை கட்டிடம் உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதை பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ள சென்னை ஐ.ஐ.டி.பேராசிரியர் மனு சந்தானம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழு மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்கிறது. ஆய்வு அறிக்கை பெறப்பட்டதும் முதலமைச்சரின் அறிவுறுத்தல் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: