துவாக்குடி ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அமர்க்களம்: 300 வீரர்கள் பங்கேற்பு

திருவெறும்பூர்: துவாக்குடியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் சீறி பாய்ந்தன. 300 வீரர்கள்  போட்டி போட்டு காளைகளை அடக்கினர். திருச்சி மாவட்டம் துவாக்குடி அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக கடந்த சில நாட்களாக வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் உட்கார்ந்து பார்வையிடும் வகையில் மேடைகள் அமைக்கும் பணி நடந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க இன்று காலை  திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளுக்கு மாவட்ட கால்நடை இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு திருவெறும்பூர் வட்டார மருத்துவர் பாலாஜி, துவாக்குடி வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், மிக்சி, மெத்தை, மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை வழங்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: