இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசுவோர் மீது கடும் நடவடிக்கை : ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை: இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசும் கூட்டத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட  அறிக்கை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமயச் சுதந்திர உரிமை, அளிக்கப்பட்டு இருக்கிறது. சமயச் சுதந்திர உரிமை என்பது, தனி நபர்கள் அல்லது சமூகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ, தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும், சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும். அதே சமயத்தில் எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை.

 ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றும் அதிமுக, பிற மதங்களை, பிறருடைய மத நம்பிக்கைகளை இழிவுபடுத்திப் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. பிற மதங்களையோ அல்லது பிற மதக் கடவுள்களையோ யார் பழித்துப் பேசினாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்பது சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழிவகுக்கும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு உண்டு.

எனவே, இந்துக் கடவுளை இழிவுபடுத்திய, இந்துக்களின் மனதை புண்படுத்திய, தரக் குறைவாகவும் நாகரிகமற்ற முறையிலும் இந்துத் தெய்வத்தை விமர்சித்துள்ள  யூ டியூப் சேனலை உடனடியாகத் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Related Stories: