ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம்..!

தூத்துக்குடி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்வருக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்கக்கோரி தாயார் ராஜேஸ்வரி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை அடிப்படையில், தமிழக உள்துறை கடந்த நவம்பர் 17ம் தேதி முதல் 30 நாட்கள் பரோல் வழங்கியது. அதன்படி மதுரை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன், தூத்துக்குடி, சூரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே ரவிசந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருத்துவ ஓய்வில் உள்ளார்.

நவம்பர் முதல் 6 முறை பரோல் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் 7வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு அளித்து உள்துறை முதன்மைச்செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் விடுப்பு நீடிப்பு அறிவிப்பை ரவிச்சந்திரனுக்கு அனுப்பி வைத்தார். தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே யுள்ள சூரப்பநாயக்கன்பட்டியில் தாயார் ராஜேஸ்வரியுடன் ரவிச்சந்திரன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: