செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் தொடர்: இறுதி போட்டிக்கு முன்னேறிய தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா

சென்னை: செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் தொடரின் இறுதி போட்டிக்கு தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். உலக அளவில் சிறந்த 16 பேர் பங்கேற்றுள்ள செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. 9 தொடர்களாக நடைபெறும் இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றுள்ளார்.

இதில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற காலிறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தா 2.5 - 1.5 என்ற கணக்கில் சீனாவை சேர்ந்த வீரரை தோற்கடித்திருந்தார். இதனை தொடர்ந்து அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ்கிரியை எதிர்கொண்டார். இந்த சுற்றில் 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றியை தீர்மானிக்க பிளேஆஃப் ஆட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து டைபிரேக்கரில் 1.5 - 0.5 என்ற புள்ளி கணக்கில் அனிஷ்கிரியை வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அதேசமயம் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்1 வீரர் கார்ல்சன் உடன் மோதிய சீன வீரர் லிரன் வெற்றிபெற்றார். இதையடுத்து செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதிப்போட்டியில் சீன வீரர் லிரன் உடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா  மோத உள்ளார்.                

Related Stories: