ஊட்டி : பாதுகாப்பு கருதி தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள மாடங்கள் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரம், இத்தாலியன் பூங்கா, புதிய பூங்கா போன்றவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகைக்குள் சென்று புகைப்படங்களை எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கண்ணாடி மாளிகையில் ஏராளமான தொட்டிகளில் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளது. பல வடிவங்களில் அங்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.மலர் கண்காட்சியின் போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இவர்கள் கண்ணாடி மாளிகைக்குள் கூட்டமாக செல்லும் போது, தவறி விழ வாய்ப்புள்ளது. மேலும், தொட்டிகளும் சேதம் அடைய வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பூங்கா நிர்வாகம் தற்காலிகமாக கண்ணாடி மாளிகைய மூடியுள்ளது. இதனால், கண்ணாடி மாளிகை வரை செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரும், அதன்முன் நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். உள்ளே செல்ல முடியாத நிலையில், ஏமாற்றத்துடன் திரும்பினர்.