லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர்: முகப்பேர் வேணுகோபால் தெருவை சேர்ந்தவர் அரிதாஸ். இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது வீட்டிற்கு மும்முனை இணைப்பு கோரி அதே பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, மின்வாரிய இளநிலை பொறியாளர் மணி ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அரிதாஸ் இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்படி கடந்த 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அரிதாஸிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு மறைந்திருந்தனர். அப்போது மணியை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி வேலரசு குற்றம் நிரூபணமானதால் மணிக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார்.

Related Stories: