திருமலை: ஆந்திராவில் அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. நீர்பாசனத் துறை அமைச்சர் விஷ்வரூப் முகாம் அலுவலகம் சூறையாடி தீ வைத்து எரிக்கப்பட்டது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்த 13 மாவட்டங்களை பிரித்து கூடுதலாக 13 புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது. அதில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்த அமலாபுரத்தை மாவட்ட தலைநகராக வைத்து கோணசீமா மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என அரசு முடிவு செய்து அறிவித்தது. இதற்கு, அப்போது பலர் ஆதரவு தெரிவித்த நிலையில் பெயர் வைக்கப்பட்ட பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் பெயரை நீக்கிவிட்டு மீண்டும் கோணசீமா மாவட்டம் என்ற பெயரே தொடர வேண்டும் என பல்வேறு சமூகத்தை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று அமலாபுரம் நகரிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணி சென்றனர். அப்போது சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அங்கு ஏற்கனவே, கூட்டங்கள் அல்லது பேரணிகளை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. போராட்டக்காரர்களின் பேரணியை போலீசார் தடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதேநேரத்தில் சிலர் எஸ்பி வாகனம் மற்றும் பஸ்கள் மீது கற்களை வீசினர். இந்த சம்பவத்தில் எஸ்பியின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் காயமடைந்தார். பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. நிலைமை கை மீறியதால் மாவட்ட எஸ்பி சுப்பா தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க உத்தரவிட்டார்.