கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில், இன்று நடைபெறும் லிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ-பெங்களூர் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த குஜராத் - ராஜஸ்தான் அணிகள் குவாலிபயர் 1 ஆட்டத்தில் நேற்று மோதிய நிலையில், 3வது மற்றும் 4வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று ‘எலிமினேட்டர்’ என்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மோதுகின்றன. குவாலிபயர் 1ல் வென்ற அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறிய நிலையில், தோற்ற அணி எலிமினேட்டரில் இன்று வெற்றி பெறும் அணியுடன் குவாலிபயர் 2 ஆட்டத்தில் மோதுவதற்காக காத்திருக்கிறது. அறிமுக அணியான லக்னோ முதல் தொடரிலேயே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. லீக் சுற்று முழுவதுமே கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.