திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெரும்பாவூர் நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் கொச்சி, சென்னை, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் கொச்சியிலுள்ள வீட்டிலிருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை வருமானவரித் துறையினர் பெரும்பாவூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தந்தங்களை வீட்டில் வைத்திருப்பதற்கு வனத்துறையின் சிறப்பு அனுமதி தேவையாகும். ஆனால் முறையான அனுமதி பெறாததால் இது தொடர்பாக மோகன்லால் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு பெரும்பாவூர் குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.