6 நாட்களுக்கு பிறகு 2 ஆயிரத்துக்கு கீழ் பாதிப்பு குறைந்தது: குஜராத்தில் பிஏ.5 வைரஸ் தொற்று

புதுடெல்லி: நாட்டில் கடந்த 6 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்து, நேற்று ஒரே நாளில் 1,675 பேருக்கு பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், வட கொரியாவில் மட்டும் கடந்த சில நாட்களில் லட்சக்கணக்கானோர் தொற்றினால் பாதித்துள்ளனர். தொற்று குறைந்தாலும், உருமாறிய பிஏ.4, பிஏ.5 வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது தவிர, குரங்கு அம்மை என்ற மத்திய ஆப்ரிக்க நாடுகளில் காணப்படும் நோய் 12 நாடுகளை சேர்ந்த 90க்கும் மேற்பட்டோரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 6 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று பாதிப்பு 1,675 ஆக குறைந்துள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் அதிகபட்சமாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதித்த நிலையில், இந்த எண்ணிக்கை 6 நாட்களுக்கு பிறகு நேற்று குறைந்து காணப்பட்டது.

கொரோனா பலி, பாதிப்பு பற்றி சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* கடந்த 24 மணி நேரத்தில் 1,675 பேருக்கு தொற்று பாதித்துள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,40,068 ஆக உயர்ந்தது.

* நேற்று ஒரே நாளில் 31 பேர் வைரசுக்கு பலியானதை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,24,490-ஐ கடந்தது. இந்த 31 உயிரிழப்பும் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

* சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 14,841 ஆக உள்ளது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 29 வயது இளைஞர் குஜராத்தில் உள்ள தனது பெற்றோரை பார்க்க கடந்த 1ம் தேதி இந்தியா வந்தார். அவருக்கு தொற்று பாதிப்பு இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவரது  மாதிரி சோதனைக்காக காந்தி நகர் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரசின் உருமாறிய பிஏ.5 வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனிடையே, அவர் 10ம் தேதி நியூசிலாந்து புறப்பட்டு சென்றார். தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. ஆனால், அவருடன் தொடர்பில் இருந்த அவரது பெற்றோருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

* இதற்கு முன்பு தமிழகம், தெலங்கானாவில் தலா ஒருவருக்கு பிஏ.4, பிஏ.5 வகை  வைரஸ் பாதிப்பை இந்திய சார்ஸ்-சிஓவி2 மரபணு கூட்டமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.

தேதி    பாதிப்பு

24    1,675    

23    2,022

22    2,226

21    2,323

20    2,259

19    2,364

80% முதல் டோஸ்

* நாட்டில் 15-18 வயதுக்கு உட்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கு மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

* இதுவரை 192.52 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories: