புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்திக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 9 பேர் கொண்ட அரசியல் விவகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி பலப்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன், ராஜஸ்தானின் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில், 2024 மக்களவை தேர்தலையும், அதற்கு முன்பாக நடைபெறும் மாநில தேர்தல்களையும் வீரியத்துடன் சந்திக்க, அரசியல் விவகார குழு உட்பட 3 குழுக்களை கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். இதில் இடம் பெறும் தலைவர்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டார். சோனியா காந்தி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் விவகாரக் குழுவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, திக் விஜய சிங், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ஜிதேந்திர சிங் என 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.