சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ₹110 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, பெட்ரோல், டீசல் விலை குறைவு காரணமாக நேற்று கிலோ ₹80க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்து காணப்பட்டது. வழக்கமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து தினசரி கோயம்பேடு மார்க்கெட்டிற்கு 90 வாகனங்களில் 1, 200 டன் தக்காளிகள் வந்த நிலையில், வரத்து குறைவால் 38 வாகனங்களில் 450 டன் தக்காளி மட்டுமே வந்தது. இதனால், தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ₹8க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக ₹100 வரை உயர்ந்தது. இதனால், இல்லத்தரசிகள் வேதனை அடைந்தனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மேலும் விலை அதிகரித்து கடந்த 2 நாட்களுக்கு முன் கிலோ ₹110 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது.