சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினால், சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்துக்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும். தமிழ்நாட்டை சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இந்த விருது பெற தகுதியுள்ளவர்.
2022ம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009 என்ற முகவரிக்கு அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாக வரும் ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். விருதுபெற தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.