அதிமுக வேட்பாளர் அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி: தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பு மனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஏற்படும் 6 காலி இடங்களை நிரப்ப இன்று காலை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதிமுக வேட்பாளர் அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, ஜூன் 10ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் 4 இடம் திமுகவுக்கும், 2 இடம் அதிமுகவுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. திமுக சார்பில் சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுக கூட்டணி சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளனர்.

அதிமுகவில் மாநிலங்களை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அதிமுகவில் தென் மாவட்டத்திற்கு ஒரு சீட், வட மாவட்டத்திற்கு ஒரு சீட் என பிரித்து வழங்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தலைமைக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் காரணமாக வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஆகி வருகிறது. வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் அதிமுக சார்பில் வெளியிடப்படும் எனவும் தெரிகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களை நிரப்புவதற்காக, இன்று (24ம் தேதி) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை சென்னை, தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கலாம். பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 28ம் தேதி (வங்கிகளுக்கு நான்காவது சனிக்கிழமை) மற்றும் 29ம் தேதி (ஞாயிறு) தவிர பிற நாட்களில் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீது ஜூன் 1ம் தேதி பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை ஜூன் 3ம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 6 பேருக்கு மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், ஜூன் 10ம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள, சட்டமன்ற குழுக்கள் அறையில் தேர்தல் நடைபெறும். 6 பேர் மட்டுமே போட்டியிட்டால், ஜூன் 3ம் தேதி மாலை போட்டியிட்டவா்கள் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Related Stories: