சிவகாசி: சிவகாசி அருகே பர்மா காலனியில் புதர்மண்டி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் இருந்து பாம்புகள் படையெடுப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சியில் பர்மா காலனி உள்ளது. 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். மெயின் ரோட்டில் இருந்து காலனிக்குள் செல்லும் நுழைவு பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி உள்ளது. இங்குள்ள வீடுகளில் முறையான கழிவுநீர் சேகரிப்பு தொட்டி இல்லை. இங்கு அமைந்துள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக மழைநீர் கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.