காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வருவதற்கு முன் தூர்வாரிவிடுவோம்: அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் 31ஆம் தேதிக்குள் நிறைவடையும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் நேற்று முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 4,964 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை 4,047 கி.மீ. நீளத்திற்கு (82 சதவிகிதம்) பணிகள் முடிவடைந்துள்ளது. இதில் ஆறுகள் தூர்வாரும் பணி முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் தினசரி 210 கி.மீ. நீளத்திற்கு போர்க்கால அடிப்படையில் கூடுதல் இயங்திரங்களை பயன்படுத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள் வாய்க்கால்களுக்கு தண்ணீர் சென்றடைவதற்கு முன் மீதமுள்ள பணிகள் அனைத்தும் 31ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம் சுமார் ஐந்தரை லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேட்டூர் அணையிலிருந்து மே மாதத்தில் நீர் திறப்பது இதுவே முதல் முறையாகும்.

Related Stories: