காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு தரக்கூடாது என்றவர்தான் அண்ணாமலை : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கு

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் செட்டித்தெருவில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசியதாவது: முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம், கொரோனா உதவித்தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கூட்டுறவு கடன் தள்ளுபடி என கிட்டத்தட்ட ரூ22 ஆயிரம் கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தினமும் திட்டங்கள், அறிவிப்புகள் என தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்.

உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினார். கர்நாடகாவில் காவல் துறையில் பணியாற்றிய அண்ணாமலை தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கொடுக்கக் கூடாது என அப்போது பேசியவர். ஆனால் இன்று 72 மணி நேரத்தில் தமிழக அரசு பெட்ேரால், டீசல் வரியை குறைக்க வேண்டும். இல்லை என்றால் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என சவால் விடுகிறார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்காக உயர்த்திவிட்டு தற்போது நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் 6 ரூபாய், 8 ரூபாய் குறைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. இதிலிருந்தே மக்களுக்கு தெளிவாக தெரிகிறது பாஜகவின் லட்சணம்.

மதக் கலவரங்கள், அதன் மூலம் மோதல்களை ஏற்படுத்துவதே கொள்கையாக கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலைக்கு... நான் சவால் விடுகிறேன்... கரூரை தாண்டி வந்து மக்களை சந்திக்க உங்களுக்கு தைரியம் உள்ளதா? அவ்வளவு ஏன் உங்கள் கரூரிலேயே மக்களை சந்திக்க உங்களால் முடியுமா? கண்ட எச்சரிக்கைக்கெல்லாம் பயந்த இயக்கம் திமுக கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: