ஓட்டேரியில் போலீசார் நடத்திய சோதனையில் 44 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது: பெண் உள்பட 6 பேர் தப்பியோட்டம்

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி பகுதியில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் மங்களபுரம் பகுதியில் உள்ள டீக் கடையில் 3 பெரிய பார்சல்களுடன் நின்றுக்கொண்டிருந்த 2 பேரை போலீசார் அழைத்தபோது அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் போலீஸ்காரர் அருண் விரட்டிச்சென்று ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பார்சல்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலம் இருந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்ட நபர் சேலம் மாவட்டம் சிவநாயக்கன்பட்டி ஊத்துமலை கிராமத்தை சேர்ந்த தினேஷ் (24) என்று தெரிந்தது. இந்த சோதனையில் 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தினேஷின் கூட்டாளிகள் சேலம் பகுதியை சேர்ந்த யோகராஜ், மோகன், இந்துமதி, பிரகாஷ் உள்பட சிலருடன் சொகுசு கார் மூலம் இன்று காலை சென்னை மெரினா பீச் பகுதியில் காத்திருந்துள்ளனர். இந்த நிலையில், தினேஷ் பிடிபட்டது தெரிந்ததும் மேற்கண்ட நபர்கள் தப்பிவிட்டனர். இதையடுத்து சென்னையில் இருந்து சேலம் வரை உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் இருந்து கார் மூலம் சேலத்துக்கு கஞ்சாவை கொண்டு செல்ல வந்ததும் காரில் ஒரு பெண் இருந்தால் போலீசார் சந்தேகிக்க மாட்டார்கள் என்பதால் தங்களுடன் ஒரு பெண்ணை அழைத்துவந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட தினேஷிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிவிட்ட பெண் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: