வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அடகு கடை சுவரை துளையிட்டு ரூ.60 லட்சம் நகைகள் கொள்ளை!: மர்ம நபருக்கு போலீஸ் வலை..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காடு கூட்ரோடு பகுதியில் அடகு கடை சுவரை துளையிட்டு ரூ.60 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. காட்பாடி அடுத்த சேர்க்காடு கூட்ரோட்டில் மேல்பாடியை சேர்ந்த அனில்குமார் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடை உள்ளது. நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு, இன்று மீண்டும் கடையை திறக்க வந்தபோது மர்ம நபர்கள் சிலர் அடகு கடையின் பக்கத்தில் இருந்த ஜூஸ் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளை நடந்த இடத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி நேரில் விசாரணை நடத்தி வருகிறார். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நகைக்கடை சுவற்றை துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே இதேபோன்று அனில்குமாரின் மேம்பாடி அடகு கடையில் நகை திருடு போனது நினைவுகூரத்தக்கது.

Related Stories: