துறைமுக நிறுவனங்களை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்

பொன்னேரி: காட்டுப்பள்ளியில் எல்&டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. கடந்த 2008ம் ஆண்டு வங்க கடலோரத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக பழவேற்காடு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நிறுவனங்கள் 1750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கி கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு, நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள்  நேற்று காட்டுப்பள்ளியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி பழவேற்காடு, லைட்ஹவுஸ், தாங்கல் பெரும்பலம், கோட்டைக்குப்பம் ஆகிய 4 ஊராட்சிகளை சேர்ந்த மீனவர்கள் ஒட்டுமொத்தமாக நேற்று மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.பின்னர் காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் அருகே 500க்கும் மேற்பட்ட மீனவ கூட்டமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்த எஞ்சிய 1500 பேருக்கும் வேலை வழங்க வேண்டும், அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Related Stories: