பைனான்சியர் கொலை வழக்கில் சரணடைந்த 2 ரவுடிகளிடம் 3 நாள் காவலில் விசாரணை

அண்ணாநகர்: சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவை சேர்ந்த பைனான்சியர் ஆறுமுகம் (36), கடந்த 18ம் தேதி, ஷெனாய் நகர் அருகே பைக்கில் சென்றபோது, 3 பைக்குகளில் வந்த 6  பேர், ஆறுமுகத்தை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக  வலைதளங்களில் வைரலாகி பரவியது. தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார்,  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தொழில் போட்டி காரணமாக டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சந்திரசேகர் (28) தலைமையிலான 6 பேர் ஆறுமுகத்தை கொன்றது தெரியவந்தது. முக்கிய  குற்றவாளியான பிரபல ரவுடி சந்திரசேகர் கடந்த 2018 மற்றும் 2021ம் ஆண்டில்  ஆறுமுகத்தை கொலை செய்ய முயன்றதும், இவர் மீது 2 கொலை, 2 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது. இதையடுத்து 6 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் மற்றும் அவனது கூட்டாளியான அதே பகுதியை  சேர்ந்த ரவுடி ரோஹித்ராஜ் (25) ஆகியோர் கடந்த 20ம் தேதி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த இருவரை காவலில் எடுத்து விசாரிக்க அமைந்தகரை போலீசார் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதன்பேரில், இவர்களை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து, அமைந்தகரை போலீசார், சந்திரசேகர் மற்றும் ரோஹித்ராஜை சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடை மேலும் 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில், இக்கொலை தொடர்பாக, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

Related Stories: