சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: போக்குவரத்து ஊழியர்களின் 13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னுக்கு வந்த கீழ்க்கண்ட பிரச்னைகளில் உரிய தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2016 பே- பேண்ட் அடிப்படையில் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு 2.57 காரணி மூலம் பே மேட்ரிக்ஸ் உருவாக்கப்பட வேண்டும். 2019 ஒப்பந்தத்தின் போதான ஊதியத்தை நிர்ணயம் செய்து அதற்குப்பின் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நிர்வாகம் உருவாக்கவுள்ள பே மேட்ரிக்ஸ், ஊதியம் பொருத்தும் முறை இரண்டையும் தொழிற்சங்கங்களுக்கு முன்கூட்டியே அளித்து தொழிற்சங்கங்களின் கருத்தை பெற்ற பிறகே இறுதிப்படுத்த வேண்டும்.