சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிய புதிதாக செயலி உருவாக்கம்: தமிழக அரசிடம் நிதி ஒதுக்கீடு கேட்டு அறிக்கை தாக்கல்; நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிய புதிய செயலி உருவாக்கம் செய்ய தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு கேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 14,138 ஏரிகள் உள்ளன. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் மாவட்டம் 1551 ஏரிகள் உள்ளன. இந்த நிலையில், நகரமயமாதல் காரணமாக பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இதில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 3,482 ஏரிகள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளது. மீதமுள்ள 10,656 ஏரிகள் ஆக்கிரமிப்புகளில் இருப்பது நீர்வளத்துறையே தெரிவித்துள்ளது.

குறிப்பாக, போரூர், வேளச்சேரி, புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேங்கைவாசல், செம்பரம்பாக்கம், புழல், ரெட்டேரி உட்பட பெரும்பாலான ஏரிகளின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது, ஆக்கிரமிப்பு வீடுகளால் ஏரிகள் குட்டையாக மாறி வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசின் மெத்தனத்தால் குளங்கள், ஏரிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால், மழை காலங்களில் நீரை சேமித்து வைக்க முடியாத நிலையில், தற்போது, மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
அதன்பேரில், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை கணக்கெடுக்கும் பணியில் நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 767 நீர் நிலைகள், 145 கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியியுள்ளது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களை, நீர்நிலைகளில் இருந்து அப்புறப்படுத்தும்பணி நடந்து வருகிறது.

தொடர்ந்து, அவர்களுக்கு மாற்று இடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருங்காலங்களில் சென்னையின் குடிநீர் தேவை என்பது 35 டிஎம்சி ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, நீர்நிலைகளை பாதுகாத்து, அதன் மூலம் குடிநீர் கட்டமைப்புகளை அதிகப்படுத்த நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நீர் நிலைகளின் மூலப்பரப்பளவு மற்றும் நீரளவை மீட்கும் நோக்கத்துடனும், தொடர்ந்து கண்காணித்து, மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்கவும், நீரின் தரத்தை ஆராயவும், நவீன தொழில்நுட்ப உதவியுடன் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளை கண்காணி்க ஒரு முன்னோடி திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் துணைக்கோள் உதவியுடன் ஒரு செயலி உருவாக்கப்படுகிறது. இதற்காக, ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்பணிகளுக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு கேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில், புதிய செயலி உருவாக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 767 நீர்நிலைகள்,145 கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியியுள்ளது.

 

----------------------------------------------சுரேஷ் காளிபாண்டி

Related Stories: