ஆற்காடு அருகே கணவருடன் பைக்கில் சென்ற ஆசிரியையின் தாலி பறிப்பு: மர்ம ஆசாமிகளுக்கு வலை

ஆற்காடு: ஆற்காடு அருகே பைக்கில் கணவருடன் சென்ற பள்ளி ஆசிரியையின் கழுத்திலிருந்த 8 சவரன் தாலியை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள எம்.என்.பாளையம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராமன் (62). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி ஜாப்லின்மேரி (55). இவர் நெய்வேலியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சிப்காட்டில் வசிக்கும் தங்களது மகளை பார்ப்பதற்காக தம்பதியினர் நேற்று பைக்கில் சென்றனர். பின்னர் அங்கிருந்து தங்களது வீட்டுக்கு இரவு புறப்பட்டனர். ஆற்காடு அடுத்த பெரிய உப்புப்பேட்டை பகுதியில் வந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவர்களை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள், திடீரென ராமன் ஓட்டிச்சென்ற பைக்கின் குறுக்கே வந்து வழிமறித்தனர். பின்னர் ஜாப்லின்மேரி கழுத்திலிருந்த 8 சவரன் தாலி மற்றும் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம ஆசாமிகள் தாங்கள் வந்த பைக்கில் தப்பிஓடினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், மர்மநபர்களை விரட்டிச்சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ராமன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: