சென்னை: தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 494 தனியார் கல்லூரிகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் பல்கலைக்கழகங்கள், அண்ணா பல்கலைக்கழகத்திடம் இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி பெரும்பாலான கல்லூரிகள் இதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அங்கிகாரம் பெற 10 கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை.
போதிய அளவு மாணவர் சேர்க்கை இல்லாததால் வரக்கூடிய கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை தாங்கள் நடத்த விரும்பவில்லை, மாணவர் சேர்க்கையை நிறுத்திக் கொள்கிறோம் என்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கல்லூரி நிர்வாகங்கள் கடிதம் எழுதியுள்ளன. இதன் மூலம் 10 கல்லூரிகளில், இறுதியாண்டு படிப்பு முடியும் வரை கல்லூரிகள் இயங்கும் என்றாலும், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டில் நடைபெறாது. எனவே இருக்கின்ற மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறிய பிறகு, 10 கல்லூரிகளும் முழுமையாக மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.