வீட்டில் கிளப் வைத்து சூதாடிய பஞ். தலைவர் உட்பட 15 பேர் கைது: ரூ.7 லட்சம் பறிமுதல்

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே வீட்டில் கிளப் வைத்து சூதாடிய ஊராட்சி தலைவர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அரசர் குளம் மாணிக்கம் குடியிருப்பில் உள்ள அடைக்கலம் என்பவரின் வீட்டில் சூதாட்ட கிளப் நடப்பதாக நாகுடி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இன்று அதிகாலை அடைக்கலம் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின் பக்கம் உள்ள அறையில் சூதாட்ட கிளப் நடப்பது தெரியவந்தது.

இதையடுத்து பணம் வைத்து சீட்டு விளையாடியதாக மணமேல்குடி ஒன்றியம் கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சி தலைவர் சாகுல் ஹமீது(63), வீட்டின் உரிமையாளர் அடைக்கலம்(60), அரசர்குளம் சேக் இஸ்மாயில்(45), ஜெய்னுல் அன்சாரி(40), ரவீஸ்(42), நைனா முகமது(45), மகாதீர் முகமது(38),  செந்தில்வேல்(44), கமால் பாட்ஷா(61), பழனிவேல்(47), நிஜாமுதீன்(35), விக்னேஷ்(39), காளிதாஸ்(33), வெங்கடேசன்(42), அன்வர்தீன்(36) ஆகிய 15 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.7 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: