திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த 19 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாமாண்டு படித்து வந்தார். பெல் பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 17ம் தேதி வயிற்றுவலி, உடல் சோர்வு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவியின் வயிற்றில் விஷம் இருப்பதை உறுதி செய்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில், பாய்லர் ஆலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பாய்லர் ஆலை போலீசார் மருத்துவமனைக்கு சென்று, அந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர். இதில் அந்த மாணவி போலீசாரிடம் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக தன்னை ஒருவன் பின்தொடர்ந்து வந்ததாகவும், கடந்த 11ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, அந்த நபர் தன்னிடம் காதலிப்பதாக கூறியதாகவும், இதனால் அவரை தான் செருப்பால் அடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 12ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, தன்னை காதலிப்பதாக கூறிய நபர் உள்பட 3 வாலிபர்கள் சேர்ந்து தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகில் உள்ள ஒரு சந்தில் வைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்க செய்ததாகவும் கூறியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 13ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், பின்னர் வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு அதிகமானதால் கடந்த 17ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும், அந்த மாணவி வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாய்லர் ஆலை போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரை தேடி வந்த நிலையில், ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த மாணவி தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் குற்றவாளிகள் 3 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை மாணவி உடலை வாங்க மாட்டோம் என்று கூறி திருவெறும்பூர் மலைக்கோவில் அருகே திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.