தலையில் கல்லை போட்டு பிளஸ் 1 மாணவன் கொலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி ஜெயலலிதா. இவர்களது மகன் மணிகண்டன்(17). அரியலூர் அரசு மாணவர் விடுதியில் தங்கி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா இறந்து விட்டார். இதனால் மதியழகன் 2வது திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இதனால் மணிகண்டனை, அவரது பாட்டி பாப்பாத்தி வளர்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தார். நேற்றிரவு பாட்டி வீட்டிற்கு அருகில் உள்ள தனது வீட்டில் தனியாக தூங்கினார். இன்று காலை நீணட நேரம் ஆகியும் மணிகண்டன் எழுந்து வராததால், பாட்டி அங்கு சென்று பார்த்தார்.

அப்போது மணிகண்டன் தலை நசுங்கிய நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகில் பாறாங்கல் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாட்டி அலறினார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கொலை செய்தது யார்? எதற்காக செய்தனர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: