தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை-புதுகை வேளாண். இணை இயக்குநர் ஆலோசனை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் ராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. மேலும் தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள்

டிராக்டரில் தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையின் அடிப்புறத்தில் பீய்ச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்க வேண்டும்.

இயற்கையிலேயே காணப்படும் என்கார்சியா ஒட்டுண்ணி கூட்டுப்புழுக்களை கண்டறிந்து ஒரு ஏக்கருக்கு 4 ஓலைத்துணுக்குகளை (40 என்கார்சியா கூட்டுப்புழுக்களை) ரூகோஸ் வெள்ளை ஈக்கள் காணப்படும் தோப்புகளில் உள்ள தென்னை மரங்களில் பரவலாக ஓலையில் பொருத்த வேண்டும்.

என்கார்சிய ஒட்டுண்ணி ஆதார தோப்புகளை ஒவ்வொரு கிராமங்களிலும் கண்டறிந்து துரிதமாக மற்ற வெள்ளை ஈ தாக்குதல் உள்ள தோப்புகளில் வைத்திட துரித நடடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.கிரைசோபெர்லா இரைவிழுங்கி ஒரு ஏக்கருக்கு 400 எண்கள் வீதம் வெளியிடவேண்டும். ரூகோஸ் வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்புறத்தில் கூட்டமாக இருந்து சாறு உறிஞ்சும்போது தேன்போன்ற திரவத்தை வெளியிடுகிறது. இத்திரவம் கீழுள்ள மட்டைகளில் மேற்புறத்தில் படிந்து கருப்பு நிற பூஞ்சாணம் வளர்வதால் இலைகளில் கருப்பாக காணப்படும். இதனை கட்டுப்படுத்த 2 சத ஸ்டார்ச் கரைசலை தெளிப்பதன் மூலம் இலைகளின் மேல் உள்ள கரும்பூசணம் காய்ந்து விழுந்துவிடும்.

தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது.தாக்குதல் மிக அதிகமாக இருந்தால் அசாடிராக்டின் ஃ வேம்புசார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுகிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட தென்னை சாகுபடியாளர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்திடுமாறு வேளாண்மை இணை இயக்குநர் ராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Related Stories: