விராலிமலை அருகே மின்கம்பி உரசி பற்றி எரிந்த தைல மரக்காடு-பொதுமக்களே தீயை அணைத்தனர்

விராலிமலை : விராலிமலை அருகேயுள்ள புதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தைல மரக்காடு உள்ளது.அந்த காட்டில் தைல மரங்களுடன் மற்ற வகை மரங்களும் ஓங்கி உயர்ந்து வளர்த்து நிற்கின்றன. இதில் அந்த காட்டின் வழியாக உயரழுத்த மற்றும் குறைந்தழுத்த மின்சாரத்தை சுமந்துகண்டு மின்கம்பி செல்கின்றது. இந்நிலையில் நேற்று விராலிமலை பகுதியில் காற்று சற்று பலமாக வீசியதால் ஆடி அசைந்த மரங்கள் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது.

இதனால் ஏற்பட்ட உராய்வினால் மரங்கள் தீ பிடித்தது. சுற்றி சுழன்று அடித்த காற்றால் தீ மளமளவென்று எரியத் தொடங்கியது. இது மேலும் காடு முழுவதும் பரவியது. இதனையடுத்து தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வாகன வருகைக்கு காத்திருக்காமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களே ஒன்று கூடி கையில் கிடைத்த இலை, தலைகளை கொண்டு தீயை தட்டித்தட்டி அணைத்தனர். இதனையடுத்து நிகழ்விடம் வந்த தீயணைப்பு துறையினர் ஆங்காங்கே அணையாமல் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர்.

மாதம் தோறும் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்துவரும் மின்சாரவரியம் இதுபோல உயரழுத்த, குறைந்தழுத்த மின்கம்பிகள் செல்லும் காட்டு பாதைகளை கண்டறிந்து மரக்கிளைகளை வெட்டி பராமரிப்பு செய்தால் இதுபோல அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துக்களை தவிர்க்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: