கரூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு

கரூர் : கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.

கரூர் மாநகரின் மையப் பகுதியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த அறநிலையத் துறை அனுமதி அளித்ததை அடுத்து இந்த ஆண்டு திருவிழா கடந்த 8ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது.

 கம்பம் நட்டதில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக நடந்து வந்து கம்பத்திற்கு தண்ணீர், பால் ஊற்றி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதல் பக்தர்கள் தேர்வீதி, வாங்கல் சாலையில் புதுத்தெரு வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவில் நடைதிறக்கப்பட்டதில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவிழாவின் முக்கிய நாட்களாக மாவிளக்கு, அக்னி சட்டி, பால் குடம், காவடி எடுத்தல் நிகழ்வுகள் இன்று (23ம் தேதி) முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்வு வருகிற 25ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: