கல்லணை வெண்ணாற்றில் கீழ்பாலம் அமைக்கும் பணி மும்முரம்

திருக்காட்டுப்பள்ளி : கல்லணை வெண்ணாற்றில் அடப்பன் பள்ளம் கீழ் பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருக்காட்டுப்பள்ளி அருகே கல்லணை காவிரி பாசன பகுதிகளை வளப்படுத்தும் ஆறுகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து வருவதால் நாளை (24ம்தேதி) மேட்டூர் அணையை திறக்க தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கல்லணை பகுதிகளில் உள்ள ஆறுகளில் நடைபெறும் பால பணிகள் மற்றும் தடுப்புச்சுவர் பணிகள் காவிரி ஆற்றில் நடைபெற்றுவரும் அனைத்து கட்டுமான பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது.

அதே போன்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் பெய்யும் மழை நீர் கல்லணை கால்வாய் வெண்ணாற்றில் கலக்காமல் சைபன் எனப்படும் கீழ் பாலத்தின் வழியாக காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் அடப்பன் பள்ளம் கீழ் பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சைபன் எனப்படும் கீழ் பாலம் முழுமையாக சேதமடைந்த நிலையில் அதை முழுமையாக மறு கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கட்டுமான பணிகள் கல்லணை கால்வாய் பகுதியில் முடிவடைந்துள்ளது. வெண்ணாறு பகுதியில் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது. அதேபோல கல்லணை கால்வாய் கரைகளில் இதற்கான பாலங்கள் கட்டும் பணியும் இன்னும் நிறைவு பெறவில்லை. இந்த பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூரில் தண்ணீர் திறப்பு காரணமாக அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் கல்லணை பாலங்கள் அனைத்தும் புது வர்ணம் பூசப்பட்டு அனைத்து சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் கல்லணை புதுப்பொலிவு பெற்றுள்ளது.

Related Stories: