விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

சென்னை :  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.5.2022) தலைமைச் செயலகத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய எண்ணமாக இருக்கக்கூடிய  உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் நலனைப் பாதுகாத்திடவும், இந்தியாவில் முதன்முறையாக வேளாண்மைக்கு இலவச மின்சாரம் தந்து சாதனை படைத்தார்கள்.  உழவர்களின் வருமானத்தைப் பெருக்குவதற்காக விளைபொருட்களை, பேருந்தில் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று அறிவித்தார்கள், அதை நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். உழவர் சந்தைகளை ஏற்படுத்தித் தந்த உன்னதத் தலைவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.  

    

உழவர்களின் வாழ்வில் ஒளியேற்ற, வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ததும், அவர்களின் வாழ்வில் ஏற்றம் காண வைத்ததும் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.  தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் அனைத்துச் சமூக மக்களின் வளர்ச்சிக்காகவும், தன்னுடைய வாழ்நாள் எல்லாம் போராடிய தலைவர் கலைஞர் அவர்கள், அவருடைய எண்ணத்தில் வாழும் வேளாண் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நமது அரசு தொடர்ந்து  செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

    

உழவர்களின் நலனை எப்போதும் பாதுகாத்து வரும் நமது அரசு, உழவர்களின் நலனுக்காக வேளாண் துறையினை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று பெயரை மாற்றியும்; வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்து உழவர்களைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. உழவர்களின் நலனை முன்னிலைப்படுத்தும் நம்முடைய அரசுக்கு இயற்கையும், நல்ல ஒத்துழைப்பை நல்குவதால், குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு மே 24-ஆம் தேதி அதாவது நாளையதினம், மேட்டூர் அணையினை திறந்து வைக்க இருக்கிறேன், அந்தச் செய்தியையும் நான் இப்போது மகிழ்ச்சியுடன் உங்களோடு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    

நான் தமிழ்நாடு வளர்ச்சிக்காக ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றான மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டது. ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவது இந்தத் திட்டத்தினுடைய முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது.     

    

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது, தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் அதை செயல்படுத்த இருக்கிறோம்.  இந்தத் திட்டமானது ஊரக வளர்ச்சித் துறையின் மாபெரும் திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராமங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதால், கிராம அளவில் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும் என்பது இதனுடைய சிறப்பு!

2021-22-ஆம் ஆண்டில் 1997 கிராம பஞ்சாயத்துகளில் ரூபாய் 227 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை இன்றைக்கு நான் துவக்கி வைத்திருக்கிறேன்.   இந்தத் திட்டத்தினுடைய முக்கிய சிறப்பம்சமே கிராம அளவில் அரசுத் துறைகளின் அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான்.  

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் அனைத்துச் சமூக மக்களையும் ஒருங்கிணைத்து, முன்னேற்றம் காண வேண்டுமென தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்த உன்னதத் தலைவர்!

அந்த அடிப்படையில், இந்தத் திட்டமும் ஒருங்கிணைக்கும் பணியை முன்னிலைப்படுத்துவதால், தலைவர் கலைஞர் அவர்களின் பெயரை இத்திட்டத்திற்கு வைத்து இன்றைக்கு சிறப்பு சேர்த்திருக்கிறோம். அது சாலப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக, கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களைச் சாகுபடிக்கு கொண்டுவருதல். நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர்ப் பாசன வசதி ஏற்படுத்துதல்.வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல்.ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக பண்ணைக் குட்டை அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்.

கால்நடைகளின் நலன் காத்து, பால் உற்பத்தியைப் பெருக்குதல்.வருவாய்த்துறையின் மூலம் பட்டா மாறுதல், இ-அடங்கல், சிறு / குறு உழவர்களுக்கு சான்று வழங்குதல். கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள் வழங்குதல்.பாசன நீர்வழித் தடங்களை தூர்வாருதல், உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்துத் துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து திட்டம் செயலாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனி மரம் தோப்பாகாது  கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற மூதுரைகளுக்கு ஏற்ப -தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள உழவர்களை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி, தேவையான தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்து, வேளாண்மை - உழவர் நலத் துறையின் பல துறைகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால் கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சி பலப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதால், கிராம அளவில் தன்னிறைவு ஏற்படும். அதனால் நகரத்தினை நோக்கி, கிராம மக்கள் இடம்பெயர்தல் தடுக்கப்படும்.

    

கிராம வளர்ச்சி என்பது பெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டிய இந்தக் காலகட்டத்தில், கிராமத்திலுள்ள அனைத்து உழவர்களையும், ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாவது பயனடையச் செய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தோடு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, அனைத்துத் துறை அலுவலர்களும் அர்ப்பணிப்போடு, சிந்தையையும் செயலினையும் ஒரே நேர்கோட்டில் செலுத்தி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்திடக் கேட்டுக் கொண்டு, வேளாண் பெருமக்கள், அரசுக்கும், அரசு அலுவலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டு, இந்த தலைமை உரையை இந்த அளவோடு நிறைவு செய்கிறேன்,இவ்வாறு பேசினார்.

Related Stories: