கலப்பட பெட்ரோல் விற்ற 2 பேர் கைது

அம்பத்தூர், மே 23: அம்பத்தூர், பட்டரவாக்கம், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட பெட்ரோல் மற்றும் ஆயில் விற்பனை செய்யப்படுவதாக, அம்பத்தூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு இயக்குநர் ஆபாஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், துணை எஸ்பி நாகராஜன், இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று திருநின்றவூர், செங்குன்றம், பட்டரைவாக்கம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, திருநின்றவூரில் உள்ள ஒரு வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் பதுக்கி, எவ்வித உரிமமும் இன்றி கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் கலப்பட ஆயில், மற்றும் 1,100 லிட்டர் கலப்பட பெட்ரோல், 200 லிட்டர் டீசல், 2,400 லிட்டர் எல்டிஓ ஆயில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்த 2 பேரை பிடித்து நடத்திய விசாரணையில், நெல்லை மாவட்டம், குமாரபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் சூசை ரெனிஸ்டர் (32), தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஜான்சன் (22) என தெரியவந்தது.

இவர்கள், கள்ளச் சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் ஆயிலை வாங்கி, அவற்றை கலப்படம் செய்து, விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: