சென்னை: அலகாபாத் திரிவேணி சங்கமம் பகுதியில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில், தமிழ் படத்தின் படப்பிடிப்பு 50 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சதீஷ் ஜி.குமார் கூறியதாவது: எனது டைரக்ஷன் மற்றும் ஒளிப்பதிவில் ‘பீச்சாங்கை’ ஆர்.எஸ்.கார்த்திக், புதுமுகம் ரேஷ்மிகா, சுமன், ஷாயாஜி ஷிண்டே, பூ ராமு, கஜராஜ் நடித்துள்ள ‘அஹம் பிரம்மாஸ்மி’ படத்தின் ஷூட்டிங்கை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடந்த மிகப் பிரமாண்டமான கும்பமேளா விழாவில் 50 நாட்கள் படமாக்கினேன். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவை மட்டுமே மையப்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது. திரில்லர், சஸ்பென்ஸ், அறிவியல், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது.