மும்பை: பஞ்சாப் கிங்சுக்கு எதிரான ஐபிஎல் டி20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் புவனேஸ்வர் குமார் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரியம் கார்க், அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பிரியம் கார்க் (4) வந்த வேகத்தில் ரபாடா பந்தில் ஆட்மிழந்தார். ஆனாலும், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஜோடி நிதானமாக விளையாடியது. இவர்கள் 2வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்த நிலையில், ஹர்பிரீத் பிரார் அபாரமாக பந்துவீசி சன்ரைசர்சை தடுமாறச் செய்தார். திரிபாதி (20 ரன், 18 பந்து), அபிஷேக் சர்மா (43 ரன், 32 பந்து), மார்க்ரம் (21 ரன், 17 பந்து) ஆகிய 3 பேரின் விக்கெட்டையும் பிரார் கைப்பற்றினார். அதிரடி வீரர் பூரண் 5 ரன்னில் எல்லிஸ் பந்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.