வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா சிறுதலைக்காடு மேல தெருவை சேர்ந்தவர் குமார்(45). இவரது மனைவி தனபாக்கியம்(35). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் குமார், தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த குமார், மனைவி மீது சந்தேகப்பட்டு அவரது கையை பின் பக்கத்தில் வைத்து கட்டி வாயில் பூச்சி மருந்தை ஊற்றி கொல்ல முயன்றார்.
அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தனபாக்கியத்தை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிந்து குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.