கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.110: மற்ற காய்கறிகள் விலையும் எகிறியது

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், மற்ற காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து இன்று காலை குறைவான வாகனங்களில் காய்கறிகள் வந்துள்ளது. மார்க்கெட்டுக்கும் தினமும் 600 வாகனங்களில் 6,000 டன் காய்கறிகள் வந்த நிலையில், மழை மற்றும் வரத்து குறைவால் இன்று காலை 400 வாகனங்களில் 4,500 டன் குறைவான காய்கறிகள் வந்துள்ளன.

இதன்காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. நேற்று பீன்ஸ் 80 க்கும் கேரட் 25க்கும் அவரைக்காய் 60க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை ஒரு கிலோ பீன்ஸ். 110 க்கும் அவரைக்காய் 80க்கும் கேரட் 35க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை புறநகரில் உள்ள சில்லறை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் 120க்கும் கேரட் 45க்கும் அவரைக்காய் 90க்கும் நாட்டு தக்காளி 110க்கும் பெங்களூரூ தக்காளி 130க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட் காய்கறி  வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறியதாவது; மழை மற்றும் வரத்து குறைவால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.

இதனால் தக்காளி, பீன்ஸ் ஒரு கிலோ 110 க்கு   விற்பனை செய்யப்படுகிறது. கேரட், அவரைக்காய் விலையும் அதிகரித்துள்ளது. அதிக விலையில்  காய்கறிகள் விற்பனை செய்யபடுவதால் காய்கறிகளை வாங்க எளிய மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தக்காளி விலையை குறைக்க அண்ணாநகர், முகப்பேர், அடையாறு ஆகிய பகுதிகளில் சென்னை பசுமை பண்ணை கடைகளில் குறைவான விலையில் தக்காளிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை கோயம்பேடு மார்க்கெட்டிலும் ஏற்படுத்தி கொடுத்தால் எளிய, மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இன்னும் சில நாட்களுக்கு தக்காளி விலை உயரக்கூடும். இவ்வாறு கூறினார்.

Related Stories: