தொடர் மழை எதிரொலி; ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: பொக்லைன் கொண்டு அகற்றம்

சேலம்: சேலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஏற்காடு மலைப்பாதையில் 20 டன் எடை கொண்ட ராட்சத பாறை சரிந்து விழுந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் உதவியுடன் பாறையை அகற்றினர்.

 தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த இரு வாரங்களாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக, ஏற்காட்டில் நாள்தோறும் பெய்து வரும் தொடர்மழையால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுகிறது. அதேசமயம் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. கடந்த 14ம் தேதி ஏற்காடு 40 அடி பாலம் அருகில், மண்சரிவு ஏற்பட்டது. உடனடியாக இரவோடு, இரவாக அது சரிசெய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அடிவாரத்திலிருந்து 18வது கிலோ மீட்டரில், சுமார் 20 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று மலைப்பாதையில் சரிந்து விழுந்தது. இரவுநேரம் என்பதால் போக்குவரத்தில் பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நேற்று காலை அவ்வழியாக வந்த பொதுமக்கள், இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பணியாளர்கள், 2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் ராட்சத பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள மலைப்பாதை பள்ளத்தில் ராட்சத பாறை தள்ளி விடப்பட்டது. ஏற்காட்டில் கோடை விழா ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒருநாள் முன்கூட்டியே வரும் 25ம் தேதி தொடங்குகிறது. எனவே, கோடைவிழாவிற்காக ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள், எச்சரிக்கையுடன் மலைப்பாதைகளில் பயணிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: