கரூர் அருகே பரிதாபம்: 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

கரூர்: கரூர் கோடங்கிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி முத்துலட்சுமி (32). இருவரும் டெய்லர். இவர்களது கனிஷ் (4). இந்நிலையில் கடந்த மாதம் 4ம்தேதி கணவன், மனைவி இருவரும் வீட்டில் துணி தைத்துக்கொண்டிருந்தனர். அப்போது மகன் கனிஷ், சிறிய கத்திரிக்கோலை எடுத்து விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது இடது கண்ணில் கத்திரிக் கோல் குத்தியுள்ளது. இதில் காயமடைந்த சிறுவனை, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கடந்த மாதம் 25ம் தேதி ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக்கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் கவனக்குறைவு காரணமாகத்தான் தனது மகனின் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டதாக முத்துலட்சுமி புலம்பி வந்துள்ளார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முத்துலட்சுமி, தனது மகன் கனிஷை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த விவசாய கிணற்றுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு தனது மகனை தன் உடலுடன் சேர்த்து துப்பட்டாவால் இறுக்கி கட்டிக் கொண்டு 40 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை தர்மலிங்கம் எழுந்து பார்த்த போது, வீட்டில் மனைவி மற்றும் மகனை காணதது கண்டு திடுக்கிட்டார். பின்னர் அந்த பகுதியில் தேடிய போது வீட்டு அருகில் உள்ள கிணற்றில் இருவரும் சடலமாக மிதந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கரூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தாய், மகன் உடலை மீட்டனர்.

தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: