வால்பாறை: வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தேயிலைத் தோட்டங்கள், வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பியது. மழையின் காரணமாக சோலையார் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள பி.ஏ.பி பாசனத் திட்ட அணைகள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நீர்மட்டம் கணிசமாக குறைந்து காணப்பட்டது. மே மாதம் 1ம் தேதி 165 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 25.5 அடியாகவும், 15ம் தேதி 27 அடியாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 32.2 அடியாக இருந்த சோலையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து, நேற்று காலை நிலவரப்படி 42 அடியாக உள்ளது.